Monday, May 5, 2014

தமிழகத்தை வளமாக்க முதல் எட்டை எடுத்து வைக்கப்போவது யார் ?

கருவேல மரங்கள்
தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை ஆண்டவர்களும் சரி ஆள்பவர்களும் சரி, மக்களுக்காகவே வாழ்வதாக சொல்லிகொள்ளும் அரசியல் வாதிகளும் சரி மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாய் ஒரு தொலைநோக்கு பார்வையில் செயல் படவில்லை என்பதே உண்மை ! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறதே தவிர அரசும் அரசு இயந்திரமும் ஏன் சமூக ஆர்வலர்களும் சரி இவற்றை பற்றி கவலை படுவதில்லை என்பதே வருத்தமான உண்மை !!

எப்பொழுதாவது தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்து உள்ளீர்களா ? அப்படி பயணம் செய்து இருந்தால் உங்களுடனே பயணம் முழுவதும் பசுமையாய் தொடர்ந்து வரும் கருவேல மரங்களை கவனித்து இருக்க தவறி இருக்க மாட்டீர்கள். கோடையிலும் பசுமை போங்க நிழல் விரிக்கும் அவைகளை பார்த்து ஆச்சரியப் பட்டு இருப்பீர்கள். கோடையிலும் பசுமையாய் இருக்கும் இந்த கருவேல மரங்கள் உண்மையில் ஆட்சியாளர்களின் அலட்சியம் சமூக ஆர்வலர்களின் கவன குறைவு இவற்றின் ஒட்டு மொத்த அடையாளம் தான் அவை. சுருங்க சொல்வதனால் வறட்சி எனும் சுடுகாட்டில் தமிழகத்தின் தலைமாட்டில் ஊன்றப்பட்ட மரம்தான் இந்த கருவேல மரங்கள்.

கருவேல மரங்கள்
தொலைநோக்கு பார்வை என்பதே தமிழகத்தை நீண்ட நெடுங்காலமாக ஆண்டுவரும் ஆட்சியாளர்களிடம் இல்லை என்பதற்கு தமிழகம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கருவேல மரங்கள் என்று சொல்லப்படும் காட்டுக்கருவை மரங்களே சாட்சி. 1960 களில் தமிழகத்தின் வறட்சியை போக்கும் விதமாக இந்த மர விதைகள் ஆகாய விமானங்கள் மூலம் விமானத்தின் உதவியால் தூவப்பட்டன எனவும் மற்றொரு சாரார் இல்லை இல்லை இலவச மதிய உணவுக்காக அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட கோதுமையில் திட்டமிட்டே கலந்து அனுப்பப்பட்டது எனவும் கூறுவார். எது எப்படியோ அன்று ஊன்றப்பட்ட விஷ வித்து விஷமரமாய் தமிழகம் எங்கும் பல்கி பெருகி விட்டது.

இந்த கருவை மரங்கள் கடும் வறட்சியை தாங்கக் கூடியவை, ஆழமாக நீண்டு செல்லும் வேர்கள் நிலத்தின் அடியே ஆழமாக சென்று ஒட்டுமொத்த நிலத்தடி நீரையும் உறிஞ்சி யெடுக்கக்கூடிய தன்மை வாய்ந்தவை. இம் மரங்களின் இலைகளோ காற்றில் நிறைந்து இருக்கும் ஈர ப் பதத்தை ஒட்டுமொத்தமாக உறிஞ்சி அருகில் இருக்கும் பிற பயிர்களின் வளர்ச்சியை பாதிப்பவை . மரத்தின் மேற் பகுதி தீயினால் கருக்கப் பட்டாலும் அடிமரத்தில் இருந்து மீண்டும் துளிர்க்க கூடியவை மொத்தத்தில் அவை பீனிக்ஸ் பறவை போன்றவை என்றால் மிகை இல்லை.

இம்மரங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை அப்படியே ஈர்த்துக்கொள்வதால் மழை பெய்யும் வாய்ப்பு பெருமளவு குறைவதுடன் இருக்ககூடிய பயிர்களும் வறட்சி தாங்காது காய்ந்து கருகி விடும். இவ்வளவு தீமைகள் இம் மரங்களால் ஏற்படுவதை தெரிந்து கொண்ட கேரளா போன்ற அண்டை மாநிலங்கள் போர்கால அடிப்படையில் விரைந்து செயல் பட்டு முற்றிலுமாக தங்கள் மாநிலங்களில் இருந்து அகற்றி விட்டன. ஆனால் நம் தமிழகத்திலோ ஆட்சியாளர்களிடமும் சரி பொது மக்களாகிய நம்மிடமும் சரி ஏற்படவில்லை என்பதே வருத்தம் கலந்த உண்மை ! இந்த கருவேல மர ஒழிப்பு துவங்குமுன் சில திட்டமிடல் அவசியம் !

முதலில் இந்த கருவேல மரங்களின் தீமைகள் குறித்த விழிப்பு உணர்வை மாநில மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

இந்த மரங்களை வெட்டி கரியாக்கி விற்பனை செய்யும் தொழில் ஈடுபட்டு உள்ள சில ஆயிரம் மக்களை மாற்று தொழிலில் ஈடுபடுத்த வேண்டும்.

மீட்கப்படும் நிலத்தின் அளவு மற்றும் தன்மைகளை கருத்தில் கொண்டு விளை நிலங்களாகவும் நீர் ஆதாரங்களாகவும் மாற்ற வேண்டும்.

மீட்டெடுக்க படும் நிலங்களின் பெரும்பகுதி நிலத்தடி நீரை அதிக படுத்தும் வகையில் நீர் நிலைகளாக மாற்றும் வகையில் திட்டமிடல் வேண்டும்.

இவை அனைத்தும் முறையாக திட்டமிடப்பட்டு செயல் படுத்தப்பட்டால் இன்னும் கணிசமான அளவு விளைநிலங்கள் மீட்டெடுக்கப்படும், நீர் ஆதாரங்கள் அதிகரிப்பதனால் வேளாண்மை சிறப்படையும், நீர் மேலாண்மையில் முன்னேற்றம் ஏற்படும் !

இதற்கான முதல் எட்டை எடுத்து வைப்பவர் யார் ?

Sunday, May 4, 2014

கருவேலமரங்களும் அரசியல் வா(வியா)திகளும் !

அரசியல் வியாதிகளும்
நமது அரசியல்வாதிகளும் தமிழகம் முழுவதும் செழித்து வளர்ந்து இருக்கும் காட்டு கருவேல மரங்களும் ஒன்று என்றால் மிகை இல்லை! காட்டு கருவேல மரங்கள் தான் இருக்கும் இடத்தில் தனது வேர்களை வெகு ஆழத்துக்கு பரப்பி தனக்கு தேவையான நீர் ஆதாரத்தை உறிஞ்சி எடுத்துக் கொள்வதுடன் காற்றில் நிறைந்துள்ள நீரையும் எடுத்துக்கொள்ளும்.

 அரசியல் வா(வியா)திகளும் அப்படிதான், அரசியலில் நுழையும் போது சைக்கிள் வாங்கவே துப்பில்லாமல் இருப்பவன், நுழைந்த சில மாதங்களிலேயே மக்கள் நல திட்டங்களில் திருடுவது  முதலாளிகளுடன் சேர்ந்து இயற்கை ஆதாரங்களை சுரண்டுவது கூட்டு கொள்ளை அடிப்பது  என்று  விதவிதமாக திருவாளர் பொது ஜனத்தை மொட்டை அடித்து   சுலபமாக,வெகு விரைவில் தெருகோடியில் இருந்தவன் கோடிகளில் புரள ஆரம்பிக்கும் மாயம் அதுவும் உடனடியாக நடைபெறும் வித்தை இந்தியாவில் மட்டுமே காணமுடியும்.

கருவேலமரம்
வளர்ந்த நாடுகளில் அங்கு இங்கு என்று ஊழல்கள் நடைபெறாமல் இல்லை ஆனால் அவர்கள் எல்லாம் மக்கள் நலம் சார்ந்த திட்டங்களில் கை வைப்பது இல்லை, நடை பெறும் ஊழல்கள் யாவும் அன்னிய நாடுகள் தொடர்புடைய இறக்குமதி மற்றும் ஆயுத பேரம் போன்றவையாய் மட்டுமே இருக்கும் . ஆனால் இங்கு மட்டுமே எல்லா மக்கள் நல திட்டங்களிலும் கொள்ளை அடிக்கும் இழிந்தவர்கள் நிறைந்துள்ளர்கள்.

இவ்வளவு ஊழல் அரசியல் வாதிகள் நாடுமுழுவதும் நிறைய என்ன காரணம் ? பொதுமக்களாகிய நாம் தான் நாம் மட்டுமே தான் காரணம் ! இன்றைய மக்கள் மனோபாவம் மிகவும் மாறியுள்ளது , ஆம் என் வீடு சுத்தமாக இருந்தால் போதும் என்று நினைத்து சாலையில் தன் வீட்டு குப்பையை கொட்டும் மனோபாவம் தான் அதிகம்.

ஆக பொது விஷயங்களில் ஒரு நிலையும் தன் சொந்த விஷயங்களில் ஒருநிலையும் என ஒரே பிரச்சனைக்கு இரு வேறு அணுகுமுறை கொண்ட பொதுமக்களாகிய நாமே அனைத்துக்கும் மூல காரணம். ஊழலை பொறுத்த அளவில் மக்கள் மாறாதவரை அரசியல் வியாதிகளை மாற்ற முடியாது அரசியல் வியாதிகள் மாறாதவரை நாடும் நாட்டு மக்களும் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கமுடியாது !!!

Saturday, November 10, 2012

மக்கள் நல அரசு ???

இந்த தலைப்பு கேள்வி பட்ட வார்த்தைகளாய் தெரியுது இல்லையா ? ஆம் நமது மத்திய மாநில அரசுகள் மக்கள் நல அரசாக இந்திய அரசியல் அமைப்பு படி செயல் பட வேண்டும் ஆனால் உண்மையில் அப்படி செயல் படுகின்றனவா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். இன்றைய அரசுகள் எல்லாமே ஒரு லாப நோக்கோடு செயல்படும் தொழில் நிறுவனம் போலவே செயல்படுகின்றன. மக்கள் நலம் என்ற வார்த்தையை அதன் பொருளை மறந்து தம் நலம் தம் மக்கள் நலம் என்ற நோக்கிலேயே செயல்படுகின்றன. மக்களின் தேவைக்கு மட்டுமே அரசு நிர்வாகம் என்ற நிலை மாறி அரசின் நலத்திற்கும் வசதிக்குமே மக்கள் வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுத்தப் படுகிறார்கள். உதாரணம் சொல்ல வேண்டுமானால் மின்கட்டண உயர்வு பேருந்து கட்டண உயர்வு இவற்றை குறிப்பிடலாம்.
ஆளுவோர் மக்கள் நலனுக்காக ஆளுவதில்லை தங்கள் 5 வருட ஆட்சி காலம் தங்கள் எண்ணப்படி அமைய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. தற்போதைய கல்வி கொள்கை ஆகட்டும் , ஆன்லைன் வர்த்தக அனுமதி ஆகட்டும், பொது துறை பங்குகளை விற்பனை செய்வதாகட்டும் எல்லாமே தங்களின் சுய லாப நோக்கு அல்லது தாம் சார்ந்தவர்களின் நலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல் படுகிறார்கள் என்பதே உண்மை. தனது அன்றாட வயற்றுபட்டுக்கே தன் உழைப்பை விற்க வேண்டியிருக்கும் அன்றாடம் காய்ச்சி உண்மையில் தாம் ஏமாற்ற படுவது தெரிந்தும் கையறு நிலைமையில் எதுவும் செய்ய சக்தியற்று விரக்தியின் உச்சத்தில் நிற்கிறான் என்பதே உண்மை. மக்களின் அறிவை வளர்க்க பயன்பட வேண்டிய கல்வி, முதலாளிகளால் கடை சரக்காய் விற்கபடுகிறது. விற்கப்படும் கல்வியும் மக்களை பணம் சம்பாதிக்கும் எந்திரமாக மட்டுமே உருவாக்குகிறது. மக்கள் நலனில் மிக முக்கியமான "ஆரோக்கியம் " பெரு முதலாளிகளின் மருத்துவ மனைகளுக்கு குடிபெயர்ந்து விட்டன. எந்த ஒரு அரசியல் வாதியோ, உயர் அதிகாரிகளோ அல்லது அவர்கள் குடும்பத்தினரோ அரசு பொதுமருத்துவ மனையில் மருத்துவ சிகிச்சை பெறுகி றார்களா அல்லது அரசு கல்வி நிறுவனத்தில் தான் படிக்கிறார்களா ? அவர்களுக்கு தெரியும் தங்கள் நிர்வாகம் பற்றி. -தொடரும் -

Saturday, December 3, 2011

காவல் துறை சீரமைப்பே ஊழலை நசுக்க உடனடி தேவை !!!

ஊழலுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எழுச்சியுடன் போராட முற்படும் இக்கால கட்டத்தில், இன்றைய அரசியல் சமுதாய சுழலில் இந்த மாற்றம் வருவது சாத்தியமா என்ற எண்ணம் நம் மனங்களில் ஏற்படாமல் இல்லை. உண்மையில் ஊழலை அறவே ஒழிக்க வேண்டும் என்றால் நமது  அரசு இயந்திரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்தால் அன்றி ஊழல் அற்ற சமுதாயம் ஏற்படுத்த முடியாது என்பது உள்ளங்கை நெல்லி கனி. இந்த மாற்றங்கள் முதலில் காவல் துறையில் இருந்தே தொடங்க வேண்டும்.

ஆள்வோரின் அடிவருடிகளாக, ஆள்வோரின் கைப்பாவைகளாக செயல்படும் காவல்துறையின் நிலைமை பரிதாபம். எவ்வளவோ காலம் போராடியும் சொந்தமாக ஒரு சங்கம் கூட துவங்க முடியாத நிலைமையில் அவர்களால் எப்படி நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட முடியும். 2001  களில் உச்ச நீதிமன்றம் ஒரு மிக முக்கியமான விஷயத்தை கோடிட்டு காட்டியது அதன் படி காவல் துறையில் என்ன என்ன மாற்றங்கள் உடனடியாக தேவை என்பதை பட்டியல் இட்டு உடனடியாக நிறைவேற்ற ஆலோசனை வழங்கியது.

ஆனால் துர்அதிஷ்டவசமாக இன்றுவரை எந்த ஒரு மாநிலமும் அதனை ஏற்று முழுமையாய் செயல்படுத்த முன்வரவில்லை காரணம்?  காவல்துறை சுதந்திரமாய்  நேர்மையாய்    செயல்பட ஆரம்பித்துவிடும்    அப்படி செயல் பட ஆரம்பித்துவிட்டால், ஊழல் செய்வோருக்கு காவலாய் எவலராய் நிற்கும் காவல்துறை மக்கள் பணியே மகேசன்  பணி என்று செயல் பட ஆரம்பித்துவிடும். விளைவு ஊழலின் இருப்பிடமாம் அரசியல் சாக்கடை சுத்த படுத்தப்படும்.

இன்றைய காலகட்டத்தில் இதற்கு சாத்தியம் இல்லை என்பதே வருத்தம் கலந்த உண்மை !!! ஒருவேளை ஒருவிழிப்புணர்வு ஏற்பட்டு யாரேனும் இதற்கும் நீதி மன்றத்தை அணுக வேண்டி இருக்குமோ என்னவோ ?!?

Thursday, March 17, 2011

உழைப் பாளியை அதிகம் சுரண்டுவது முதலாளி களா அல்லது ஆள்வோரா ?



          நம் நாட்டில் மட்டுமல்லாது  இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் விஷயம் பொதுவானது. என்று மனிதன் நாடோடி வாழ்க்கையை விட்டுவிலகி வசதியான நாகரிக வாழ்கை வாழத் தலைப்பட்டானோ அன்று துவங்கிய இது இன்றுவரை முடிவில்லாது தொடர்கிறது. இன்றைய வாழ்க்கை முறையில் மனிதனை இரு வர்க்கமாக மட்டுமே பிரிக்கலாம். ஒன்று சுரண்டுவோர் மற்றொன்று  சுரண்டபடுவோர். இந்த இரண்டும் மாறாத இரு பிரிவுகள். முதலாளித்துவ கட்டமைப்பில் முதலாளி  உழைப்பளியை சுரண்டும் நிலை இருந்தது. தொழிலாளி வர்க்க அமைப்பில் உழைப்பாளி  பணம் படைத்தவரை கட்டுப்படுத்தும் நிலைமை இருப்பினும் இரண்டிற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. இந்த விஷயத்தை உலக அளவில் பார்ப்பதை விட நம் நாட்டளவில் பார்ப்பது எனக்கும் உங்களுக்குமான புரிதலுக்கு எளிமையாய் இருக்கும் என்பதால் நாம் நாட்டளவில் மட்டும் இதை பார்போம்.

         நம் நாடு சுதந்திரம் அடையும் பொழுது இந்த வேறுபாடுகள் பெரியதாக இருந்தன. இந்த வேறுபாட்டை களைய அரசாங்கம் இந்த பிரச்சனையை கையில் எடுத்தது அதுவரையில் ஒரு இனத்தோடு மட்டும் போராடி வந்த சுரண்டபடுவோன் அதன் பிறகு அரசையும் எதிர்கொள்ள வேண்டி வந்தது. புரியவில்லையா? சரி புரியும் படி சொல்கிறேன்.

முதன் முதலில் இந்த வேறுபாடுகளை களைய அரசு அரசுடமை , மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற வற்றில் இறங்கியது. துவக்கத்தில் அரசுஉடமை ஆக்கப்பட்ட வங்கிகளை மட்டும் உதாரணத்திற்கு பார்போம். அன்று அரசின் நோக்கம் சுரண்டலுக்கு எதிராக இருந்தது, எனவே அரசே கையகபடுத்தி சுரண்டலுக்கு எதிரான பணியை துவங்கியது. ஆனால் இன்று நிலைமை என்ன ?
 இன்று இதே வங்கிகள் (அரசு ) மற்ற்றொரு சுரண்டும் இனமாக மாறிவிட்டது தான் சமுக அவலம். மக்கள் வசதிக்காக என்று துவங்கப்பட்ட வங்கிகள் வசதிகளை கொடுத்து அதிகம் சுரண்டுவது தான். இன்றைய அளவில் வங்கி கணக்கு இல்லாதோரே இல்லை என்பதால் இது எளிதில் புரியும் என நினைகிறேன்.
             ஒரு நிலையில் அரசு நிர்வாக செலவுகளுக்காக மற்றும் மேம்பாடுகளுக்காக வரி விதிக்கப்பட்டது. இன்று எதில் எல்லாம் வரி போட்டு அரசு வருவாய் மேம்படுத்தலாம் என்று ஆராயவே குழுக்களை அமைக்கும் அவலம் காண முடிகிறது.
முன்னாளில் நிலக்கிழார்கள் தங்கள் உழை ப்பாளிகளை  அடிமைப்படுத்த பயன் படுத்திய சாராய கடைகள் இன்று அரசாங்கத்தின் காமதேனுவாய் ,உழைப்பவன் உழைப்பால் வந்த வருமானத்தை சுரண்டுகின்றன.

 இந்த சுரண்டல் பட்டியல் முடிய வில்லை......          ஆனால்  தற்காலிகமாக முடித்து வைக்க படுகிறது

Sunday, February 13, 2011

வலை பதிவாளர்கள் மேல் அரசின் அறிவிக்காத தணிக்கைமுறை

சீனாவை பொறுத்தவரை இன்டர்நெட் பயன்பாடு என்பது தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட ஒன்று என்பதால் அதுகுறித்த அரசின் அணுகுமுறை என்பது வெளிப்படையான ஒன்று எனவே மாற்று கருத்துக்கோ, கேள்விகளுக்கோ அங்கு இடமில்லை , ஆனால் சமீப காலமாக இந்தியாவில் இன்டர்நெட் மற்றும் பதிவாளர்கள் (bloggers) மீது மறைமுகமாக தணிக்கை முறை ஏவி விடப்பட்டு உள்ளதாகவே தோன்றுகிறது.
முதலாவதாக பதிவாளர்களின் paypal  கணக்குகளின் மீது கடுமையான சட்ட திட்டங்கள் ஏவி விடப்பட்டன. அதன்படி பதிவாளர்கள் டாலர்களில் சம்பாதிக்கும் அன்னியசெலாவணி அப்படியே இந்திய வங்கி கணக்குக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகள் ஏவிவிடபட்டுளன.
 சமீபகாலத்தில், மத்திய மாநில அரசுகளை பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகள் விமர்சிததைவிட வலை பதிவாளர்கள் விமர்சித்ததுதான் அதிகம். ஆம் வலைபதிவாளர்களின் விமர்சனம் படித்தவர்களை நேரடியாக சென்றடைந்தது. அதன் விளைவும் அனைவரும் அறிந்ததே. இதை தாங்கிக்கொள்ள முடியாத ஆட்சியாளர்களின் கோபம் வேறுவிதமாக வலை பதிவாளர்களை தாக்குகிறது . இந்த சிலமாதங்களில் பெரும்பாலான google blogspot blogs  திறக்கமுடியாத நிலைமையில் உள்ளன. ISP  எனப்படும்  service provider களிடம் மிகவும் போராடியே அவைகளை வலை பின்னலில் திறக்க செய்ய வேண்டிஉள்ளது.

இதில் அதிசயமான ஒன்று இன்றுவரை google இதுகுறித்து எந்த ஒரு கேள்வியும் எழுப்பாததுதான்.  Google அமைதியை  உடைக்கும் போதுதான் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். கூடிய சீக்கிரம் வரவேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமும் கூட!!!!!!!

Thursday, February 10, 2011

ஊழல் குற்றசாட்டுகளுக்கு தண்டிக்கப்படவேண்டியவர்கள் அரசியல் வாதிகளா ? அதிகாரிகளா?

                 சமீப காலகட்டத்தில் இந்தியாவில்  அரசியல் வாதிகளுக்கு எதிரான ஊழல் குற்ற சாட்டுகள் கவலை யளிப்பதாக உள்ளன. இதில் ஒட்டுமொத்த அரசியல் வாதிகளும் மக்களை கோமாளிகளாகவும்  ஏமாளி களாகவும் எண்ணி தங்கள் அரசியல் நாடகத்தை  அரங்கேற்றுவது வெட்ககேடான ஒன்று.
அலை கற்றை ஊழல் விசயத்தில் அரசியல் வாதிகளின் அணுகுமுறையை சற்று கூர்ந்து கவனித்தால் விஷயம் புரியும். எதிர் கட்சிகள் விசாரணை கோரி போராட்டம் நடத்தினால் ஆளும் கட்சி பதிலுக்கு விசாரணை நடத்தலாம் ஆனால் முந்தைய உங்கள் ஆட்சி காலத்தையும் சேர்த்து விசாரணை செய்யலாம் என்கின்றனர். அப்படியானால் யாருமே நேர்மையானவர்கள் இல்லை என்பது தானே உண்மை!
                         இவ்வளவு துணிச்சலாக அரசியல் வாதிகள் குற்றம் புரிய உதவிசெய்வதும், துண்டுவதும் யார் ? சந்தேகமே இல்லாமல் அரசு பணியில் முதல் நிலையில் உள்ளவர்கள் தான். எழுத படிக்கச் தெரியாத ஒரு அரசியல்வாதி பதவிக்கு வரும் பொழுது ஒன்றுமே தெரியாமலே பதவி ஏற்கிறான்.ஆனால் அவனுக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகள் ஊழல் செய்வது எப்படி என்றும், சட்டத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்றும் பாடம் எடுக்காத குறையாக கற்பிகின்றார்கள். ஆக பதவி ஏற்ற கொஞ்ச காலத்திலே அரசியல் வாதிகள் மிக திறமை வாய்ந்த ஊழல் பெருச்சாளிகளாக அதிகாரிகளின் தயவால் மாறிவிடுகின்றனர். எனவே அரசியல் வாதிகளை தண்டிப்பதை விட அதிகாரிகளை தண்டிப்பதே ஊழலை தடுக்க பெரிதும் உதவும்.
          நீங்கள் அறிந்திருப்பீர்கள், பெரும்பாலான ஊழல் தொடர்பான திட்டங்களின் கோப்புகள் நீதி விசாரணைக்கு வருமுன்னரே காணமல் போய்விடுவதான் காரணம் தெரியுமா?
          சம்மந்தப்பட்ட கோப்புகளில் நேர்மையான அதிகாரிகள் திட்டங்களுக்கு எதிரான குறிப்புகள் எழுதி இருப்பார்கள் அந்த கோப்புகள் அப்படியே சமர்ப்பிக்க படுமானால், ஊழல் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு துணை போனவர்களும் மாட்டிகொள்வார்கள் என்பதாலேயே மறைக்க பட்டுவிடுகின்றன.
             ஆக எல்லா விதத்திலும் அதிகாரிகளின் பங்கு ஊழலில் அதிகம் என்பதால் ஊழலை கட்டுபடுத்தவேண்டுமானால் துணைபோகும் அதிகாரிகளை முதன்மை குற்றவாளிகளாக அறிவித்து தண்டனைக்கு உட்படுத்தினால் மட்டுமே  ஊழலை ஒழிக்க முடியும்.